|
ஒரு
கிராமத்தின் முன்னேற்றம் அங்கு வாழ்கின்ற மக்களின் அறிவு வளர்ச்சியிலும்
ஒற்றுமையிலும் பிறருக்கு உதவி வாழும் பெருந் தன்மையிலும் தங்கியுள்ளது.
இவ்வகையான நற்பண்புகளைப் பெற்று ள்ள வியாபாரிமூலை மக்கள் தமது சமூகம்
முன்னேறப் பல வகையான தொண்டுகளைப் புரிந்துள்ளனர். தொண்டுகள் அனைத்திலும்
மிகவும் உயர்ந்தது கல்வித் தொண்டு. கலாசாலை நிறுவியவர்கள் தாம் பெற்ற
கல்விச் செல்வத்தை எவ்வித பிரதி உபகாரமும் கருதாது வாரி வழங்கியவர்கள்,
தாம் வைத்திருக்கும் நூல்களை மற்றையோருக்கும் வாசிப்பதற்கு கொடுத்து
உதவியவர்கள், வாசிகசாலை நிறுவியவர்கள், சனசமூக நிலையங்களை அமைத்து அதன்
மூலம் விரிவான அடிப் படையில் சமூகப்பணி ஆற்ற வழிவகுத்தவர்கள் ஆகிய
இவர்கள் எல்லாம் மகத்தான சேவை புரிந்தவர்கள் மக்கள் மனதில் என்றும்
நிலைத்து வாழ்பவர்கள்.
இந்தவகையில் எம் ஊரில் கடந்த காலங்களில் இத்தகைய சேவை செய்தவர்களை
ஒருகணம் எண்ணிப்பார்க்கும் போது கல்வி மான் களாயும் நூல்
சேகரிப்பவர்களாகவும் சேகரித்த நூல்களைப் பிறருக்கு வாசிக்கக்
கொடுத்துதவியவர்களாகவும் திகழந்த
நான்கு தலைமுறை க்கு முந்திய
பெரியோர்கள் சிலரின் நினைவுகள்தான் நெஞ்சில் நிறைகின்றன.
திரு.சு.வெற்றிவேலு சட்டம்பியார், திரு.சின்னத்தம்பியார் சரவணமுத்து,
திரு.ஆ.ஆ.சிதம்பரப்பிள்ளை, திரு.தலைவாசல் செல்லையா, திரு.கந்தப்பர்
சுப்பிரமணியம், திரு.வே.சிதம்பரப்பிள்ளை சட்டம்பியார் ஆகியோர்
இவ்வகையில் குறிப்பிடக் கூடியோராவார்கள். நூல்கள் வாசிக்க வேண்டுமென்ற
பெருவிருப்பில்லாத அந்தக்காலத்தி லேயே இவர்கள் மிகுந்த சிரமப்பட்டு
அறிவுப்பணி ஆற்றியுள்ளமை வியப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியதாகின்றது.
இவர்களை அடுத்து பழமொழித் தீபிகையின் ஆசிரியரான திரு.வே.ஆ.சிதம்பரப்பிள்ளை என்பார் தலைவாசலில்
1920 ஆம் ஆண்டு வரையில் ஒரு
வாசிகசாலையை ஆரம்பித்துச் சில வருடங்கள் வரை நல்ல முறையில் நடாத்தி
வந்தார். அங்கு தினசரிகளும் வார, மாத சஞ்சிகைகளும் வைக்கப்பட்டதாக
அறியப்படுகிறது.
பின்னர் திரு.கந்தநயினார் அருணாசலம் என்னும் பெரியார் சமூகத் தொண்டுகள்
பல புரிய வேண்டும் எனும் பெருவிருப்பால் சித்தி விநாயகர் ஆலயத்திற்குத்
தென்கிழக்கே அருள் மடாலயத்தை அமைத்து நற்காரியங்கள் நடைபெற வேண்டும்
என்ற ஆவலின் காரணமாக வாசிகசாலை, இலவச வைத்தியநிலையம், அன்னதானம்
என்பவற்றைச் சில ஆண்டுகள் வரை சிறப்பாக நடாத்தி வந்தார். திரு.ஆ.சபாரத்தின ஐயர் என்பார் இந்த வாசிக சாலையின் பொறுப் பாளராக இருந்தார்
என்றும் இது இயங்கிய காலம்
1925 – 1935 வரை என அக்காலகட்டத்தில்
வெளியிடப்பட்ட சில துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பெரியோர்கள்
வாயிலாகவும் அறியமுடிகிறது.
இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த காலகட்டத்திலே வியாபாரிமூலை
இளைஞர்கள் ஒன்று கூடி வியாபாரிமூலை ஐக்கிய இளைஞர் சங்கம் எனும் அமைப்பை
உருவாக்கி அதன் மூலம் பல்வேறு பணிகளைப் புரிந்தனர். இவர்கள் அமைத்த
வாசிகசாலை 1940 ஆம் ஆண்டளவில் திருவாளர் செல்லையா மார்க்கண்டு அவர்களின்
இல்லத்திலுள்ள ஒரு கொட்டிலில் ஆரம்பமாயிற்று. மணல் பரப்பியுள்ள
நிலத்தில் மக்கள் தினமும் வந்திருந்து பத்திரிகைகளையும் சஞ்சிகை களையும்
வாசித்திருந்தனர். பின்னர் சங்கக் கடைக்கு அந்த இடம் தேவைப்படவே அது
வேறிடத்திற்கு மாற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வேளையில்
திரு.வே.தா.சி.சிவகுருநாதன் அவர்கள் தமது இல்லத்திலே தலைவாசலுக்கு அருகே
ஒரு உயர்ந்த கொட்டிலை அமைத்து வாசிகசாலை தொடர்ந்தும் நடைபெறுவதற்கு வழி
வகுத்தார். நூல் நிலையம் ஒன்றும் அருகே அமைக்கப்பட்டது. பாரதிவிழா,
மகாத்மா காந்தி பிறந்த தினம், இந்திய சுதந்திர தினம் ஆகியவை
இந்நிலையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டன.
இந்நிலையத்தில் முக்கிய தொண்டாற்றியவர்களாக திரு.வே.சிவஞானப்பிரகாசம்,
திரு.கா.மு.கதிரவேற்பிள்ளை, திரு.இ.சீவ ரத்தினம், திரு.க.பாலகிருஷ்ணர்,
திரு.த.ப.த.பரமகுருநாதர், திரு.தி.சதாசிவம் ஆகியோரை யும் இன்னும்
பலரையும் குறிப்பிடலாம். இவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்போராகத்
திருவாளர் வே.தா.சி.சிவகுருநாதன், பண்டிதர் பொன்.கிருஷ்ணபிள்ளை,
திரு.வே. சிவக்கொழுந்து, திரு.சி.நாகலிங்கப்பிள்ளை,
திரு.ஆ.சிதம்பரப்பிள்ளை, திரு.தி.வரதகணபதிப்பிள்ளை ஆகியோர் விளங்கினர்.
இந்நிலையம்
1945 ஆம் ஆண்டுவரையும் வெகு சிறப்பாகத் தொண்டாற்றியது.
இதன் பின்னர் மேற்படி சங்கத்தின் பணிகளில் சிறுவராயிருந்த போது
பங்காற்றிய திரு.ஆ.க.நடராசா, திரு.மு.சு.தருமலிங்கம் ஆகிய இருவரும் எம்
ஊரில் வாசிகசாலைகள் தோன்றுவதும் மறைவதுமாயிருந்த தற்கான காரணிகளை
தம்முள் ஆராய்ந்தனர். நிர்வாகத்தில் இளைய தலைமுறையினரைச் சேர்த்துக்
கொள்வதனாலும் வியாபாரிமூலைத் தபாற் பெட்டிச் சந்திக்கு அருகில்
நிலையத்தை அமைப்பதாலும் அதைத் தொடர்ந்து செயல்படச் செய்ய முடியும் என்ற
தீர்மானத்திற்கு வந்தனர். தங்களின் இம் முடிவை வீரபத்திரர் கோவிலில்
நடைபெற்ற சரஸ்வதி பூசையைக் காணவந்த இளைஞர்களாகிய திரு.மு.க.கதிர்காமத்
தம்பி, திரு.செ.கதிரவேற்பிள்ளை, திரு.செ.சிவராஜசிங்கம்,
திரு.வை.கா.சிவப்பிரகாசம் ஆகியோரிடம் முன்வதைத்தனர். அனைவரும் அதனை
வரவேற்றனர். “கலைமணி” என்ற பெயரையும் அந்நிலையத்திற்குச் சூட்டி அடுத்து
வரும் விஜயதசமியன்று ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது. இவ்வெண்ணத்தை
பண்டிதர் பொன்.கிருஷ்ணபிள்ளையிடமும் திரு.வே.க.கந்தையாவிடமும்
திரு.வே.சிவக்கொழுந்து அவர்களிடமும் தெரிவித்தபோது அவர்கள் அதை மனமார
வரவேற்று ஆக்கமும் ஊக்கமும் அளித்தனர்.
1949ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் விஜயதசமியன்று
திரு.ஆ. முருகுப்பிள்ளை(பரதர்) அவர்களுடைய கட்டடத்தில் திரு.மகாகணபதிக் குருக்களின் ஆரம்ப பூசையுடன் நிலையம் வெகுகோலா கலமாகத் திறந்து
வைக்கப்பட்டது. இந்நிலையத்தின் முதலாவது ஆண்டுவிழா வீரபத்திரர்
ஆலயத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
××முன்பக்கத்திற்கு
மேலும் தொடர்ச்சி… |